2005ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருந்தபொழுது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம். பா.ஜ.க. எதிர்கட்சியாக இருந்த பொழுதும் பின்னர் 2014ம் ஆண்டு பதவியேற்ற பொழுதும் இந்த திட்டத்தை ஆதரித்தது இல்லை. இந்த திட்டத்திற்கு நிதி அதிகம் வேண்டும் என கோரிய பொழுது “முந்தைய அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வியின் அடை யாளமாக மட்டுமே இது தொடரும்” என மோடி கூறினார். அதாவது இந்த திட்டம் தேவையற்றது என்பது மோடி அரசாங்கத்தின் நிலை! எனவே தொடர்ந்து இந்த திட்டத்திற்கு தரப்பட்ட முக்கியத்துவமும் நிதியும் மோடி அரசாங்கத்தால் குறைக்கப்பட்டே வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் விவசாய சங்கங்களும் ஏனைய பல அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.
கோவிட் 19 காலத்தில் 15 கோடிக்கும் அதிகமான உழைப் பாளிகள் வேலை இழந்துள்ளனர். கோவிட் பிரச்சனை எப்பொ ழுது முடியும் என்பதோ அல்லது வேலை இழந்த உழைப்பா ளிகள் பலருக்கு எப்பொழுது மீண்டும் வேலை கிடைக்கும் என்பதோ எவருக்கும் தெரியாது. இந்த சூழலில் ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; இந்த திட்டத்தின் கீழ் உள்ள பணி நாட்களும் ஊதியமும் அதிகரிக்க வேண்டும் எனவும் இந்த திட்டம் நகர்புறங்களிலும் அமலாக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் தேசம் முழு தும் பல இயக்கங்களை கொரனோ காலத்திலும் நடத்தினர். இந்த வலுவான இயக்கங்களுக்கு பின்னர்தான் மோடி அரசாங்கம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்க முன்வந்தது. ஆனால் தேவையை ஒப்பிடும் பொழுது இது மிக குறைவு ஆகும்.
குறிப்பாக இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர் கள் கிராமங்களுக்கு திரும்பியுள்ள சமயத்தில் இந்த திட்டத்தின் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது. 25000 மற்றும் அதற்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பிய சுமார் 116 மாவட்டங்களில் சென்ற ஆண்டு மே மாதம் 48.22 இலட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடினர் எனில், இந்த ஆண்டு மே மாதம் 89.23 இலட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடி யுள்ளனர். இது 86.27% உயர்வு ஆகும். இந்த 116 மாவட்டங்க ளில் பீகாரில் 32%, உ.பி.யில் 31%, மத்தியப் பிரதேசம் 24%, ராஜஸ்தான் 22%, ஜார்க்கண்ட் 3%, ஒடிசா 4% என அடங்கும். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் விவரங்கள் இல்லை. இந்த 116 மாவட்டங்களுக்கு சுமார் 66 இலட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பியுள்ளனர். உ.பி. மாநிலத்தில் தான் அதிகபட்சமாக இந்த திட்டத்தின் தேவை 313% அதி கரித்துள்ளது.
எனினும் இந்த 116 மாநிலங்களில் மட்டுமல்ல; தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமே ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளது. தேசம் முழுவதும் சென்ற ஆண்டு மே மாதம் 2.12 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடினர் எனில் இந்த ஆண்டு 3.29 கோடி குடும்பங்கள் நாடியுள்ளன. இது 55% உயர்வு ஆகும். தமிழகத்தில் சுமார் 85.32 இலட்சம் பேர் ஊரகை வேலை உறுதித் திட்டப் பணி அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் 66.49 இலட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு எடப்பாடி அரசாங்கம் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது இன்றைய தேவை.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ 65,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் முந்தைய பாக்கி ரூ.11,500 கோடி ஆகும். எனவே உண்மையான ஒதுக்கீடு சுமார் 50,000 கோடி மட்டுமே. ஊரடங்குக்கு பின்னர் கடுமையான விமர்சனம் கார ணமாக மேலும் 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட போதாது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ரூ.1,50,000 முதல் ரூ.1,90,000 கோடி ஒதுக்கீடு செய்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள வேலை இழந்த பெரும்பான்மையினருக்கு வேலையும் ஓரளவு நிவார ணமும் கிடைக்கும். மேலும் இதனை நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
எந்த திட்டம் அகற்றப்பட வேண்டும் என மோடி கூறினாரோ அந்த திட்டம்தான் இன்று மிக முக்கியத் தேவையாக மாறி உள்ளது. மோடி அரசாங்கம் கூடுதலாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை உருவானது. இந்திய சமூகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவும் ஏழ்மை குறித்து மோடி அரசாங்கத்தின் புரிதல் மிகவும் குறைவு என்பதும் நவீன தாரளமய பொருளாதார கோணத்தில் இருந்து இந்த பிரச்சனையை அணுக முடியாது என்பதையும் கோவிட்19 பெருந் தொற்று தெளிவாக்கியுள்ளது எனில் மிகை அல்ல.